திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 69 ஆயிரம் கன அடி நீர்வரத்து


திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 69 ஆயிரம் கன அடி நீர்வரத்து
x

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 69 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

திருச்சி

ஜீயபுரம்:

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய உபநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அந்த அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைக்கு வரக்கூடிய உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு, வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் முக்கொம்பு மேலணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் நுங்கும், நுரையுமாக, அதிக இரைச்சலுடன் வெளியேறுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பாலத்தின் மேல் பகுதியில் நின்று கொண்டு கண்டு ரசித்தனர்.

மேலும் தண்ணீர் அதிக அளவு வெளியேறுவதால் பொதுப்பணித்துறை மற்றும் ஜீயபுரம் போலீசாரின் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டது. ஆனால் அதை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

காவிரியில் 29,500 கன அடி நீர்...

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் 69 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 29,500 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் (தெற்கு) 29,150 கன அடி தண்ணீரும், வடக்கு பகுதி கொள்ளிடத்தில் 9,490 கன அடி தண்ணீரும், அய்யன்பெருவளை, புள்ளம்பாடி ஆகிய வாய்க்காலில் 875 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story