மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன்


மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
x

கனியாமூர் கலவர வழக்கில் கைதான மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்து கடலூர், வேலூர், திருச்சி ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்களில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கனியாமூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 296 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் ஏற்கனவே 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதுடன் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 13 பேரின் மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மற்ற 174 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இம்மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் 56 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மற்ற 49 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.




Next Story