புதுக்கோட்டையில் தேசிய திறனறி தேர்வை 6,606 பேர் எழுதினர்


புதுக்கோட்டையில் தேசிய திறனறி தேர்வை 6,606 பேர் எழுதினர்
x

புதுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய திறனறி தேர்வை 6,606 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நடத்தப்படும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நடப்பாண்டிற்கான தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 28 மையங்களில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், பகல் 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுத 6,736 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 ஆயிரத்து 606 பேர் தேர்வு எழுதினர். 130 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுக்கான பணிகளில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.


Next Story