அய்யாற்றின் குறுக்கே ரூ.4¾ கோடியில் தடுப்பணை


அய்யாற்றின் குறுக்கே ரூ.4¾ கோடியில் தடுப்பணை
x

அய்யாற்றின் குறுக்கே ரூ.4¾ கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.

திருச்சி

உப்பிலியபுரம்:

புளியஞ்சோலை

திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகே உள்ள பச்சைமலை, புளியஞ்சோலை ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அவர்களை ஈர்ப்பதில் அங்கு ஓடும் அய்யாற்றுக்கு முக்கிய பங்குண்டு. குறைந்த ஆழத்துடன், தெளிந்த நீரோட்டமாக செல்வதால் இதில் குளித்து மகிழ இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தடுப்பணை

ஆனாலும், சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து மகிழ போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், மது அருந்துவோர் உடைத்து வீசும் மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடக்கும் பாதைகளின் வழியாக ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, குளிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.இந்த நிலையில், அய்யாற்றில் ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரை ஜம்பேரி, வெங்கடாஜலபுரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு கொண்டு சென்று பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் புளியஞ்சோலை பகுதியில் அய்யாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட நீர்வள ஆதாரத்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.4¾ கோடி ஒதுக்கீடு

அதாவது, கொல்லிமலை நீர்மின் திட்டத்துக்காக புளியஞ்சோலையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் இருந்து 400 மீட்டருக்கு கீழ் பகுதியில், ஜம்பேரி அணைக்கு நீர்பிரிந்து செல்லக்கூடிய இடத்தில் இந்த தடுப்பணை அமைய உள்ளது. கொல்லிமலையில் இருந்து வரும் நீர், மழைக்காலங்களில் வரும் காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றை தாங்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதால், நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குழுவினர், புளியஞ்சோலையில் தடுப்பணை கட்டுவதற்கான இடம், அணை வடிவம், கட்டுமானம் குறித்து அண்மையில் திட்ட அறிக்கை தயாரித்துள்ளனர். அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, தற்போது ரூ.4¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் இங்கு தடுப்பணை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால், நீர்வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் பாதுகாப்பாக குளித்து மகிழ வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story