மது-சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


மது-சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2023 6:45 PM GMT (Updated: 28 Jan 2023 6:46 PM GMT)

திருமக்கோட்டை, பேரளம் பகுதிகளில் மது-சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை, பேரளம் பகுதிகளில் மது-சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்காணிப்பு பணி

திருமக்கோட்டை டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்ட்ரோ ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருமக்கோட்டை டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வல்லூரை சேர்ந்த சங்கர் (வயது40) என்பது தெரிய வந்தது.

கைது

இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.வண்ணாரப்பேட்டை அருகே மதுவிற்ற கண்ணாரப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் (53) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

110 லிட்டர் சாராயம் பறிமுதல்

இதேபோல் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புஷ்பவல்லி மற்றும் போலீசார் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூத்தனூர் பகுதியில் ஒரு வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்த ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அவர், கூத்தனூர் ரோட்டு தெருவை சேர்ந்த வசந்தா (65) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story