ஆத்தூரில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்


ஆத்தூரில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்
x

ஆத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம் அடைந்தன.

சேலம்

ஆத்தூர்:

முகநூல் காதல்

சேலம் சங்கர் நகர் நடேசன் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கவி ஸ்ரீ (வயது 19). இவருக்கும், ஆத்தூர் கடை வீதியை சேர்ந்த நஞ்சப்பர் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திகேயன் (21) என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகேயன், கவி ஸ்ரீ ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு ஓடிச்சென்று ஆத்தூர் தெற்கு காடு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அதேபோல் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

மற்றொரு ஜோடி

ஆத்தூர் தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் சரவணன் (28). இவருக்கும் அய்யனார் பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மகள் ஸ்ரீ பிருந்தாவிற்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் வடசென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆத்தூர் புறநகர் போலீசில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மணிவேல், விவசாயி. இவருடைய மகள் ஷாலினி (25). எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அருள் என்பவரின் மகன் பிரவீன் ராஜ்(25) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பின்னர் அவர்கள் வடசென்னிமலை முருகன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். அங்கிருந்து அவர்கள் ஆத்தூர் புறநகர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ேபச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் நகர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story