சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
x

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்

ும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை மீட்டுக்கொண்டுவர சிலைகடத்தல் தடுப்பு பிரிவு பேலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிலை திருட்டு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சுந்தரபெருமாள் கோவில். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் ராஜா, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஒரு புகார் அளித்தார்.

அதில், சவுந்தராஜபெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டு அதற்கு பதிலாக போலியாக ஒரு சிலையை வாங்கி வைத்துள்ளனர். 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் அந்த சிலை திருடிப்பட்டிருக்கலாம். எனவே கோவிலில் திருடப்பட்ட பழங்கால உலோக சிலையை விசாரணை செய்து மீட்டு பொது வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறியிருந்தார்.

லண்டன் அருங்காட்சியகம்

அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் கோவிலில் இருந்த சிலையை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலியான சிலையை கோவிலில் வைக்கப்பட்டது தெரிய வந்தது. திருடுபோன திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிலையை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது உண்மைதானா? என அறிவதற்காக லண்டன் கிழக்கு கலைத்துறையின் கண்காணிப்பாளர் லாண்ட்ரஸ், கும்பகோணத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிலில் உள்ள மற்ற சிலைகள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் 3 சிலைகள் திருட்டு

எனவே கோவிலில் உள்ள சிலைகள் உண்மையானதா? அவற்றை திருடி விட்டு போலியாக வைத்துள்ளனரா? என்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் உள்ள அனைத்து சிலைகளையும் அதன் பழைய புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கோவிலில் இருந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய 3 பழங்கால வெண்கல சிலைகள் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த 3 சிலைகளும் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போயிருக்கலாம் என தெரிய வந்தது.

அமெரிக்க அருங்காட்சியகத்தில்...

இதையடுத்து சிலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 சிலைகளையும் மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிலைகளை திருடிவிட்டு போலி சிலைகளை வைத்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story