கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது


கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது
x

சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

போதை மாத்திரைகள் விற்பனை

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஷ் தங்கையாவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் சந்தேப்படும்படியான பார்சல் வந்து இருப்பதாக செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அதில் பெங்களூருவில் இருந்து அடிக்கடி ஒரே பெயருக்கு ஒரு பார்சல் வருவதாகவும், அவர்கள் மீது சந்தேகமாக உள்ளதாகவும் கூரியர் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

கைது

அந்த குறிப்பிட்ட பார்சலை யார் வாங்க வருகிறார்கள்? என தனிப்படை போலீசார் மறைந்து இருந்து நோட்டமிட்டனர். அப்போது அந்த பார்சலை வாங்க ஆட்டோவில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது

மேலும் அவர்கள் வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 1½ கிலோ கஞ்சா இருந்தது. ஆட்டோவுடன், கஞ்சா, போதை மாத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். .

விசாரணையில் அவர்கள் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குள்ளு என்ற இனியவன் (வயது 24), தாழம்பூர் ஊராட்சியை சேர்ந்த பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story