2-வதுநாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


2-வதுநாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x

2-வதுநாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

வேதாரண்யம் தாலுகா சாலக்கடையில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதையடுத்து தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 மாதத்தில் இந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால் 4 மாதமாகியும் கடை இதுவரை அகற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்றுமுன்தினம் கடையை அகற்றக்கோரி கடை முன்பு அமர்ந்து முற்றுைக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் தாசில்தார் ஜெயசீலன், கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்திர சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள், தாசில்தார் ஜீப்பை மறித்து மறியலில் ஈடுபட்டனர். பின்பு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடையை அகற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வேறு பகுதிக்கு மாற்றப்படும்

நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் 2 நாட்களுக்கு கடையை திறப்பதில்லை என்றும், விரைவில் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story