சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!
x

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை, பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை சோதனை செய்தனர். அப்போது கேரளா மாநிலம் கன்னூரை சேர்ந்த நிசார் மண்டல்(வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது பர்சு மற்றும் காலில் அணிந்து இருந்த ஷு ஆகியவற்றை பரிசோதித்து பார்த்த போது அதில் தங்கம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 64 லட்சத்தி 98 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அதே போல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ. 69 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடியே 24 லட்சத்தி 48 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கேரளா வாலிபர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து7 பேரிடமும் தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story