கோவையில் இன்று, 2,500 சிலைகள் பிரதிஷ்டை


கோவையில் இன்று, 2,500 சிலைகள் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 17 Sep 2023 10:30 PM GMT (Updated: 17 Sep 2023 10:30 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 2,500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அங்கு பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


கோவை


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 2,500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அங்கு பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


விநாயகர் சதுர்த்தி விழா


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டனர்.இதுதவிர பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதற்காக கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் செய்யும் இடத்தில் இருந்து வேன்களில் ஏற்றிக்கொண்டு பிரதிஷ்டை செய்யும் இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக இறக்கி வைத்தனர். பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.


2,500 சிலைகள் பிரதிஷ்டை


கோவையில் விநாயகர் சிலைகளை உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பல்வேறு அமைப்பு களும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விண்ணப்பித்தன. அதன்படி கோவை மாநகரில் 680 சிலைகளும், புறநகரில் 1,611 விநாயகர் சிலைகளை வைக்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 2,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று தெரிகிறது.


கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை, தெப்பக்குளம் மைதானத்தில் பிர மாண்ட வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு, தீபாராதனை மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன.


போலீஸ் பாதுகாப்பு


கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை), மாநகர பகுதியில் 22-ந்தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கும் (விஜர்சனம்) நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி யையொட்டி கோவை மாநகர், புறநகரில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



Next Story