மேல்மலையனூரில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை 232 பேர் கைது


மேல்மலையனூரில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை 232 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

மேல்மலையனூரில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 232 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதாவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகா் பாபுவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 232 பேரை வளத்தி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story