துபாயில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கம் மற்றும்ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 35 பாக்கெட்டுகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அந்த சிகரெட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கமும், வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 25 வயது வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அதில் அவர், உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் வாலிபரின் துபாய் விமான பயணத்தை ரத்து செய்தனர். அந்த வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் அமெரிக்க டாலர்களை எதற்காக கடத்திச் செல்ல முயன்றார்? அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story