திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!


திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!
x
தினத்தந்தி 16 May 2022 10:19 AM GMT (Updated: 16 May 2022 10:19 AM GMT)

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடைபெற்ற சப்தஸ்தான விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 13 நாள் நடைபெறுகிறது. 

விழாவை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி காலை கொடி ஏற்றம் நடைபெற்றது அதை தொடர்ந்து மே 9-ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

அதேபோன்று  கடந்த 13-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது நேற்றுமுன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வந்தது. அப்போது பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவையாறு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1000 கணக்காண பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதி வந்து தேர் நிலையடி வந்தவுடன் காவேரி ஆற்றில் வானவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து  இன்று மே 16-ம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. 

அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. நாளை தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். 

விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story