“உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” - மதுரை ஆதீனம் பேட்டி


“உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” - மதுரை ஆதீனம் பேட்டி
x
தினத்தந்தி 3 May 2022 6:32 AM GMT (Updated: 3 May 2022 6:32 AM GMT)

உயிரைக் கொடுத்தாவது, தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை,

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம். இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தடை குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. தருமபுரம் ஆதீன மடத்துக்கு கவர்னர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம். 

எனது குருவான தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது, நடத்துவோம். உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story