சென்னை மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டம்


சென்னை மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 4:11 AM GMT (Updated: 2 April 2022 4:11 AM GMT)

சென்னை பல்லாவரம் மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.



சென்னை,



தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலையும் அவர் நேற்று சந்தித்து பேசினார்.  இதன்பின், கெஜ்ரிவாலுடன் டெல்லியில் உள்ள பள்ளி கூடங்களுக்கு நேரில் சென்று அவற்றை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  இதேபோன்று சமூக சுகாதார சேவை மையங்களாக செயல்பட்டு வரும் டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் பார்வையிட்டார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தமிழகத்திலும் மாதிரி பள்ளிக்கூடங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என நான் உறுதியாக கூறுகிறேன்.  தமிழக மக்களின் சார்பில் நான் அவரை அழைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று, டெல்லியில் பள்ளியை பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்பை கண்டு மகிழ்ந்தேன்.

மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனைய செய்து விட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியம் ஒன்றை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது நெகிழ்ந்தேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் உள்ள எங்களுடைய பள்ளிகளுக்கும், மொஹல்லா கிளினிக்குகளுக்கும் வருகை தந்து அவற்றை பார்வையிட்டு சென்றார்.  எங்களுடைய பள்ளிகளை அவர்களுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம் என்று கூறினார்.

இந்த நிலையில், டெல்லியை போன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, சென்னை, பல்லாவரம் மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, வருகிற 9ந்தேதி பள்ளிக்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார் என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.




Next Story