சென்னை: திருமண ஆசைகாட்டி 20 பெண்கள் பாலியல் பலாத்காரம் - காதல் மன்னன் கைது


சென்னை: திருமண ஆசைகாட்டி 20 பெண்கள் பாலியல் பலாத்காரம் - காதல் மன்னன் கைது
x
தினத்தந்தி 21 March 2022 6:54 PM GMT (Updated: 22 March 2022 1:56 AM GMT)

சென்னையில் திருமண ஆசைகாட்டி 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காதல் மோசடி மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து மாடல் அழகிகள் 3 பேர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

திருமண ஆசைகாட்டி...

எங்களோடு விளம்பர படங்களில் நடித்த மாடலிங் வாலிபர் ஒருவர் எங்களிடம் காதலிப்பதாக சொல்லி பழகி, பின்னர் திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தையும் கறந்து விட்டு, கழற்றி விட்டு, விட்டார்.

எங்களிடம் உறவு வைத்தபோது, எங்களுக்கு தெரியாமல் ரகசியமாக எடுத்த படத்தை காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் பெற்றோருக்கு தெரிந்து விடும், என்று பயந்து விஷயத்தை வெளியில் சொல்லாமல் நாங்களும் மறைத்து விட்டோம்.

நாங்கள் 3 பேரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். அந்த வாலிபரை பற்றி விசாரித்ததில் எங்களைப்போன்ற இன்னும் ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது கற்பை சூறையாடி இருப்பதும், தொடர்ந்து அவரது காம களியாட்டங்கள் நீடிப்பதும் தெரிய வந்தது.

பெண்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த மனித மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க சபதம் போட்டு, நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.

எங்களது பெற்றோருக்கு தெரியாமல் நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த பெண்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.

துணை கமிஷனர் தலைமையில்...

அந்த புகார் மனுவை ரகசியமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், அவரது தலைமையில், வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இதற்காக களத்தில் இறக்கப்பட்டனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், காதல் என்ற புனிதமான சொல்லை, தனது காமலீலைகளுக்கு பயன்படுத்திய காதல் மோசடி மன்னனின் பெயர் முகமது செய்யது (வயது 26) என்று தெரிய வந்தது.

புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர். பி.காம். பட்டதாரியான இவர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அவர் மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது, பரபரப்பு வாக்குமூலம்

காதல் மன்னன் முகமது செய்யதுவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அதுவும் எந்தவித பயமும் இல்லாமல் தெரிவித்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

சாதாரண நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்தவன். இளம் வயதிலேயே நான் அழகாக இருப்பேன். பள்ளி பருவத்தில் இருந்தே எனது காதல் விளையாட்டு தொடங்கி விட்டது. அப்போதே பெண்களிடம் பாலியல் ரீதியாக உறவு வைக்க தொடங்கினேன்.

நான் கல்லூரி படிப்பு முடித்து விட்டு, நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு இருந்ததால், மாடலிங் தொழிலில் புகுந்தேன். அங்கு நிறைய பெண்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. காதலை சொல்லி பழகுவேன். எனது அழகை கண்டு மயங்கி நிறைய பெண்கள் எனது காமவலையில் வீழ்ந்தனர்.

திருமண ஆசை காட்டி...

பழகிய சில நாட்களில் படுக்கையை பகிர்ந்து கொள்வேன். அதற்கு சம்மதிக்காத பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி படுக்கையறைக்கு அழைத்து வந்து விடுவேன். கடிக்க கரும்பு மட்டும் அல்லாது அதற்கு கூலியும் கிடைப்பது போல, பழகிய பெண்கள் எனக்கு லட்சக்கணக்கில் பணமும் கொடுத்தனர். எனவே இதை தொழிலாக செய்ய தொடங்கி விட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக எனது இந்த தொழிலில் இன்பத்தை பெண்கள் அள்ளிக்கொடுத்தனர்.

வாட்ஸ் அப் போன்ற நவீன தகவல் பறிமாற்ற சாதனங்கள் இந்த காதல் மோசடி வாழ்க்கைக்கு பெரிதும் கைகொடுத்தது. எனக்கு படுக்கை விரித்த பெண்களின் புகைப்படம், அவர்களோடு நான் தனிமையில் இருக்கும் படங்களை தேதி வாரியாக பட்டியல் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

என்னிடம் 20 பெண்களின் பட்டியல் உள்ளது (அதை போலீசாரிடம் கொடுத்துள்ளார்). இது கணக்கில் உள்ள பட்டியல். கணக்கில் வராத பெண்களின் பட்டியலும் உள்ளது.

தாலி கட்டி ஆசை காட்டி..

திருமண ஆசை காட்டினால் கூட சில பெண்கள் இன்பத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். அந்த பெண்கள் கழுத்தில் போலியாக தாலி கட்டியதும் உண்டு. சில நாட்கள் அவர்களோடு வாழ்வேன். அதன் பிறகு ஏதாவது காரணம் சொல்லி கழற்றி விட்டுவிடுவேன்.

கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இன்றி சென்ற எனது இந்த இன்ப களியாட்ட வாழ்க்கைக்கு இப்போதுதான் சட்டரீதியான தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலையும் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் களியாட்ட மன்னன் முகமது செய்யது, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அதன்பிறகு அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story