விவசாயி வீட்டில் திருட முயன்ற 2 பேருக்கு தர்ம அடி


விவசாயி வீட்டில் திருட முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:45 PM GMT)

குள்ளஞ்சாவடி அருகே விவசாயி வீட்டில் திருட முயன்ற 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கடலூர்

குள்ளஞ்சாவடி,

குள்ளஞ்சாவடி அருகே கட்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 43) விவசாயி. இவரது மனைவி செல்வி (35). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் சுரேஷ்குமாரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள், சுரேஷ்குமாரின் வீட்டுக்குள் 2 பேர் புகுந்து திருட முயற்சி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், அந்த மர்மநபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, குள்ளஞ்சாவடி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

இதில் அவர்கள் காட்டுக்கூடலூரை சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (26), ஒடப்பன்குப்பம் சுப்புராயன் மகன் செல்லமுத்து (28) ஆகியோர் என்பதும், சுரேஷ்குமார் வீட்டில் திருட முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து பெருமாள், செல்லமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story