புதுமாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து


புதுமாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
x

மீன்சுருட்டி அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

தகராறு

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 58), விவசாயி. இவருடைய மகன் பவித்ரன் (27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் இதே கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளியான ஜெயமணி (32) என்பவருக்கும், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பவித்ரனிடம் ஜெயமணியை பற்றி கார்த்திக் விசாரித்ததாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயமணி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பவித்ரன் வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஜெயமணி தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவித்ரனை தலை, கை உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.

மேலும் இதனை தடுக்க வந்த பவித்ரனின் தந்தை பாலசுப்பிரமணியனையும் கத்தியால் குத்திவிட்டு ஜெயமணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

தீவிர சிகிச்சை

இதில், படுகாயம் அடைந்த தந்தை-மகனை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவித்ரன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயமணியை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story