கார் மோதி 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்


கார் மோதி 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:47 PM GMT)

தேவகோட்டை அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை

தேவகோட்டை

கார் மோதல்

சென்னையை சேர்ந்தவர் கல்வத் செய்யது(வயது 32). கட்டுமான வேலை செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை பார்த்துவிட்டு தனது காரில் ஜெமினி (30) என்பவருடன் பொன்னமராவதி நோக்கி திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த சடையங்காடு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உணவகத்திற்கு காரை திருப்பும்போது பின்னால் ராமேசுவரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி 5 பேர் பயணம் செய்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கல்வத் செய்யது கார் மீது மோதியது.

அடுத்தடுத்து மோதல்

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த மொண்ணானி கிராமத்தை சேர்ந்த செல்வம், தேவகோட்டை விவேகானந்தர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது மோதியது. மேலும், நிற்காமல் சென்ற கார் தானாவயலில் இருந்து தேவகோட்டை நோக்கி வந்த சுகுணா ஓட்டி வந்த மொபட் மீதும் மோதியது.

இந்த விபத்தில் கல்வத் செய்யது, செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சுகுணா, காரில் பயணித்த 2 ேபர் என 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

2 பேர் பலி

அதில் செல்வம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story