இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - அரசு சார்பில் வரவேற்பு


இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - அரசு சார்பில் வரவேற்பு
x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, சென்னை வந்தடைந்தனர்.

சென்னை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்களான வினோத், நம்புமிலன், காளிமுத்து, எபினேசர், கிருஷ்ணன் உள்பட 15 பேர் கடந்த 5-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை போலீசார் கைது செய்தனா்.

இதைத்தொடர்ந்து, படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை போலீசார், 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவா்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய மீனவர்களை பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story