தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,412 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,412 வழக்குகளுக்கு தீர்வு
x

கரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,412 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

கரூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2023-ம் ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2 அமர்வுகளிலும், குளித்தலை நீதிமன்றத்தில் 1 அமர்விலும் என மொத்தம் 3 அமர்வுகளில் நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை நீதிமன்றம், கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி தாலுகா நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டன.

1,412 வழக்குகளுக்கு தீர்வு

இதில் 3 அமர்வுகளில் மொத்தம் 1,905 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,412 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரத்து 172 ஆகும்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.

குளித்தலை

குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தலைமையில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 408 வழக்குகளுக்கு ஒரு கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 684 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள் பிரகதீஸ்வரன் (குளித்தலை), அசோக்பிரசாத் (கிருஷ்ணராயபுரம்), சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story