தூத்துக்குடியில் கடலோர காவல்படையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் பயங்கரவாதி போல் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் கடலோர காவல்படையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் பயங்கரவாதி போல் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடலோர காவல்படையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் பயங்கரவாதி போல் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு ஒத்திகை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், பயங்கரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஊடுருவ முயற்சி

அதன்படி நேற்று சாகர் கவாச் என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வ.உ.சி. துறைமுகம் கப்பல் நிறுத்தும் பகுதியில் ஒரு விசைப்படகில் 9 பேர் வந்தனர். அவர்கள் துறைமுகத்துக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருந்தனர்.

11 பேர் கைது

அங்கு ரோந்து சென்ற போலீசார் படகை மடக்கி பிடித்து, அதில் இருந்த பயங்கரவாதிகள் போன்ற வேடம் அணிந்து வந்த 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 போலி வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக சென்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பல் கடத்தல்

இன்று (புதன்கிழமை) இந்த ஒத்திகை நிகழ்ச்சி வ.உ.சி துறைமுகம் பகுதியில் நடக்கிறது. இதில் பயங்கரவாதிகள் வ.உ.சி. துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பலை கடத்த முயன்றால், அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.


Next Story