காளியம்மன் கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்
பண்ருட்டி அருகே காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 1008 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே எலவத்தடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாழவந்தான் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் 1008 பால்குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிளக்கு பூஜை
பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மகா சண்டி ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.