1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150-க்கு விற்பனை


1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150-க்கு விற்பனை
x

கும்பகோணத்தில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எலுமிச்சைப்பழம்

பழங்காலம் முதலே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு எலுமிச்சைப்பழம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. எல்லாகாலங்களிலும் எலுமிச்சைப்பழம் கிடைக்கிறது. கோடை காலங்களில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சைப்பழம் பெரிதும் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடைகாலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சைப்பழம் விலை கும்பகோணம் அடுத்த உள்ள தாராசுரம் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சைப்பழம் நேற்று ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் பழத்தின் ரகத்திற்கு ஏற்றவாறு ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கீரை விலை குறைவு

இதுகுறித்து எலுமிச்சைப்பழ வியாபாரிகள் கூறுகையில்,

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை, ஒட்டன்சத்திரம், ஒசூர், திருச்சி மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் எலுமிச்சைப்பழங்கள் கும்பகோணம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

வெயில் காலங்களில் சர்பத் போன்றவற்றை செய்வதற்காக கடைக்காரர்கள் 4 கிலோ முதல் 5 கிலோ வரை வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்த அளவே உள்ளது.

இதனால் எலுமிச்சைப்பழத்தை யாரும் விரும்பி வாங்குவதில்லை. மேலும் இந்த மழையால் எலுமிச்சைப்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளதால் விலை உயரும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் 4 கட்டு ரூ.50-க்கு விற்பனையான அரை கீரை நேற்று 5 கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை கீரை ரூ.20-க்கும், முளை கீரை ரூ.25-க்கும், விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருந்தாலும் கீரையை யாரும் வாங்க வரவில்லை என்றனர்.


Next Story