ஆன்லைன் வர்த்தக நிறுவன இணையத்தை முடக்கி மோசடி செய்த வாலிபர் கைது; ரூ.4¼ கோடி பொருட்கள் மீட்பு


ஆன்லைன் வர்த்தக நிறுவன இணையத்தை முடக்கி மோசடி செய்த வாலிபர் கைது; ரூ.4¼ கோடி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4¼ கோடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி அந்த நிறுவனம் இணையதளத்தை முடக்கி, தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் தென்கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 23) என்பது தெரியவந்தது. பி.டெக் பட்டதாரியான இவர், ஹேக்கராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் லட்சுமிபதி, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி, வாடிக்கையாளர்களின் பரிசுக்கூப்பன்களை கொண்டு அந்த பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் பரிசுக்கூப்பன்களுக்கு வழங்கப்படும் வெகுமதி புள்ளியை (ரிவார்டு பாயிண்ட்) பணமாக மாற்றி உள்ளார்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 5 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் என ரூ.4¼ கோடி பொருட்களை போலீசார் மீட்டனர். இதுமட்டுமல்லாது லட்சுமிபதிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சம் முடக்கப்பட்டது.

ேஹக்கர் லட்சுமிபதியிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் கமிஷனர் தயானந்த் கூறுகையில், பெங்களூருவில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி ரூ.4.¼ கோடி பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆந்திர ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதற்கு முன்பு பெங்களூருவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதுவே முதல் வழக்கு ஆகும். இவர் துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். பின்னர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்திலும் பணி செய்துள்ளார். அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு எனது பாராட்டுகள். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார்.


Next Story