பொதுமக்கள் முன் மனைவியை நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்!


பொதுமக்கள் முன் மனைவியை நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்!
x
தினத்தந்தி 23 Aug 2022 4:16 AM GMT (Updated: 23 Aug 2022 4:17 AM GMT)

புனேவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் கணவரின் உடன்பிறப்புகள் நிர்வாணமாக மக்கள் முன்னிலையில் குளிக்க வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட புனேவை சேர்ந்த 30 வயதான பெண், தனது கணவர் மற்றும் அவருடைய சகோதர சகோதரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் அவருடைய கணவர், மாமியார், உறவினர்கள் மற்றும் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அந்த பெண் 2013இல் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது கணவர் பணம் கேட்டு அவரை துன்புறுத்தத் தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல், வரதட்சணை கேட்டும், தனக்கு ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ள பெண் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கணவர் மற்றும் கணவரின் உடன்பிறந்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல சாமியார்கள் சொல்வதை கேட்டு சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவரது கணவருக்கு கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு மவுலானாவுடன் தொடர்பு ஏற்பட்டது. பெண்ணின் கணவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மவுலானாவிடம் அழைத்துச் சென்று அங்கு அந்த பெண்ணுக்கு சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த பெண்ணின் கணவருடைய தொழில் லாபம் அடையும் என்று மவுலானா கூறியுள்ளார்.

சமீபத்தில் அவரிடம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க கணவரின் உடன்பிறந்தவர்கள் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் அந்த பெண்ணை பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்கச் சொன்னார். அவ்வாறு செய்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சடங்குகளைப் பின்பற்றி அந்தப் பெண்ணை முழு நிர்வாணமாக பொது மக்கள் பார்வையில் குளிக்க வற்புறுத்தினர்.

இதனையடுத்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவத்தில் புனே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story