'எந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுடன் நிற்போம்' - சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி


எந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுடன் நிற்போம் - சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி
x

எந்த கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருப்போம் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

லக்னோ,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கெஜ்ரிவால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், அகிலேஷ் யாதவ் பதிலளித்தார். அப்போது அவர், "விவாதிப்பதற்கு இதை விட பல்வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன" என்றார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "எந்த ஒரு இடத்தில் வைத்து, எந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் சரி, நாங்கள் அந்த பெண்ணுக்கு துணையாக நிற்போம். அவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் நிச்சயமாக பேசி முடிவெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.


Next Story