திருமணத்துக்கு காரில் சென்றபோது விபத்து.. மணமகன் உட்பட 4 பேர் பலி


திருமணத்துக்கு காரில் சென்றபோது விபத்து.. மணமகன் உட்பட 4 பேர் பலி
x

லாரி மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அஹிர்வாரா (25) என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக மணமகன் வீட்டை சேர்ந்த 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

கார் கான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள படகான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென காரின் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்து, காரினுள் சிக்கியிருந்த இருவரை மீட்டனர். எனினும், எஞ்சியவர்களை போலீசாரால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த விபத்தில் மணமகன் ஆகாஷ் அஹிர்வாரா, அவரது சகோதரர், 4 வயது குழந்தை, கார் டிரைவர் என 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்காக சென்றபோது லாரி மோதியதில் மணமகன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story