உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க 2 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் உத்தவ் தாக்கரே அணியினர் அதிரடி


உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க 2 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் உத்தவ் தாக்கரே அணியினர் அதிரடி
x
தினத்தந்தி 25 Oct 2022 9:45 PM GMT (Updated: 25 Oct 2022 9:45 PM GMT)

தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க 2 லாரிகளில் பிரமாண பத்திரங்களை எடுத்து சென்று உத்தவ் தாக்கரே அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.

மும்பை,

சிவசேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்தார். மொத்தம் உள்ள 56 எம்.எல்.ஏ.க்களில் அவருக்கு 40 பேர் ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.

சிவசேனாவின் 18 எம்.பி.க்களில் 12 பேரும் ஷிண்டே பக்கம் உள்ளனர். இதுதவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்களும் ஷிண்டேக்கு ஆதரவாக உள்ளனர்.

உத்தவ் தாக்கரே அணிக்கு உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை ஷிண்டே அணியுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உத்தவ் தாக்கரே வசம் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தில் யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், சின்னத்தை முடக்கியது. மேலும் உத்தவ், ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது.

இந்தநிலையில் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாண பத்திரங்கள், ஆவணங்களை கொண்டு சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய விவகாரங்களை கவனித்து வரும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் அனில் தேசாய் கூறுகையில், "கட்சியினர் சுமார் 11 லட்சம் உறுப்பினர் படிவங்களை சேகரித்தனர். ஆனால் இந்த படிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல நிபந்தனைகளை விதித்து உள்ளது. எனவே 8½ லட்சம் உறுப்பினர் படிவங்களையும், 2,62 லட்சம் நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்து உள்ளோம். மேலும் சில மாவட்டங்களுக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.


Next Story