பிரதமரை படிக்காதவர் என்பதா? கெஜ்ரிவால் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்


பிரதமரை படிக்காதவர் என்பதா? கெஜ்ரிவால் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்
x

நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல என்று கெஜ்ரிவாலை குஷ்பு விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூறியிருப்பதாவது: "ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல" என சாடியுள்ளார்.


Next Story