வரன் தேடிய தந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்


வரன் தேடிய தந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்
x

திருமணத்திற்கு வரன் தேடிய தனது தந்தையை கள்ளக்காதலன், அவரது மகனுடன் சேர்ந்து கொன்று உடலை கழிவறை குழாயில் மகள் மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



மிர்சாபூர்,


உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் நகரில் ஜமால்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயாபட்டி களன் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தனது மகளான சுமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடியுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் சந்தேகத்தின்பேரில், அந்த கிராமத்தில் வசித்த ரவீந்திர குமார் கவுர் (வயது 40) என்பவரை அழைத்து விசாரித்து உள்ளனர். இதில், அவர் சுமனின் தந்தை சந்தோஷை கொலை செய்த விவரங்களை போலீசில் ஒப்பு கொண்டுள்ளார்.

சந்தோஷின் உடல் கழிவறையில் உள்ள பெரிய கழிவு நீர் குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் பின்னணி பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சந்தோஷின் மகள் சுமன், திருமணம் ஆனவரான ரவீந்திராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனால், இது தெரியாமல் சுமனின் தந்தை தனது மகளுக்கு வரன் தேடியுள்ளார். இதுபற்றி சுமன் அளித்த தகவலை அறிந்து ரவீந்திரா ஆத்திரமடைந்து உள்ளார். சந்தோஷை கொலை செய்ய மகள் சுமன் திட்டமிட்டு உள்ளார்.

இதன்படி சந்தோஷை தனது வீட்டுக்கு வரவழைத்த ரவீந்திரா, பின்னர் அவரை கொலை செய்துள்ளார். இதற்கு ரவீந்திராவின் மகன் கவுதம் கவுர் என்பவரும் உதவியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் ரவீந்திரா, அவரது மகன் மற்றும் சுமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

தொடர்ந்து சுமன் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை பெற்ற மகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story