சிவசேனா சின்னத்தை முடக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி மேல் முறையீடு


சிவசேனா சின்னத்தை முடக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி மேல் முறையீடு
x
தினத்தந்தி 10 Oct 2022 10:28 AM GMT (Updated: 10 Oct 2022 10:35 AM GMT)

நேற்று முன்தினம் இரவு தேர்தல் ஆணையம் ஷிண்ேட, உத்தவ் தாக்கரே ஆகிய 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னத்தை அதிரடியாக முடக்கியது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். இதனால் சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும்,ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது.இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி கட்சி சின்னம் மற்றும் பெயருக்கு உரிமைகோரி கடந்த 4-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தது.

இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த தேர்தலில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருஜுதா லட்கே போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜனதா கட்சி முன்னாள் கவுன்சிலர் முர்ஜி பட்டேலை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் சிவசேனா கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணியிடம் விளக்கம்கேட்டு இருந்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையத்தில் முன்வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஷிண்ேட, உத்தவ் தாக்கரே ஆகிய 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னத்தை அதிரடியாக முடக்கியது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.


Next Story