15 வயது மனைவியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது; டெல்லி ஐகோர்ட்டு


15 வயது மனைவியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது; டெல்லி ஐகோர்ட்டு
x

15 வயது மனைவியுடனான உடலுறவு ஆனது பாலியல் பலாத்காரம் ஆகாது என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் தனது மகளை கர்ப்பிணியாக்கி விட்டார் என கூறி சிறுமியின் தாய், நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அதன் விசாரணை முடிவில், நீதிபதிகள் சுரேஷ் குமார் கைத் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், அந்த சிறுமி ஆடவருடன் 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது என வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பின்பே உடலுறவு நடந்துள்ளது.

அதனால், இதில் குற்றம் எதுவுமில்லை. அந்த நபர் விடுவிக்கப்படுகிறார் என கூறியது. போலீசாரின் வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கூடுதல் செசன்ஸ் நீதிபதியும் இதேபோன்ற தீர்ப்பை முன்பு வழங்கினார். அதனை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. அந்த முஸ்லிம் நபர் தனது 2-வது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்து இருந்தது.

ஐ.பி.சி.யின் பிரிவு 375-ன் (பலாத்காரம்) கீழ் பாலியல் உறவு அல்லது பாலியல் செயல்களை தனது மனைவியுடன் நபர் ஈடுபடும்போது, அந்த மனைவி 15 வயதுக்கு உட்பட்டவர் இல்லையென்றால் அது பலாத்காரம் இல்லை என தெரிவிக்கின்றது.

இந்த வழக்கில், 2015-ம் ஆண்டு தனது மகள் கர்ப்பம் அடைந்தது தெரிந்ததும், சிறுமியின் தாயார் அந்நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். எனினும், விசாரணை நீதிமன்றத்தில் அந்த சிறுமி, அந்நபருடனான தனது திருமணம் பற்றி தாயாருக்கு தெரியாது. அதனால், கர்ப்பிணியானதும் அதுபற்றி அவர் போலீசில் புகாராக கூறிவிட்டார் என தெரிவித்து உள்ளார்.


Next Story