ஷாருக்கானிடம் லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை


ஷாருக்கானிடம்  லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை
x

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

ேபாதை பொருள் தடுப்பு பிரிவினர் 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஆர்யன்கானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக முன்னாள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 11-ந் தேதி வழக்குப்பதிவு செய்தது. மேலும் விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேக்கு சம்மன் அனுப்பியது.

சி.பி.ஐ. வழக்குக்கு எதிராக சமீர்வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு திங்கள்கிழமைவரை சமீர் வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் இன்று ரூ.25 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்பாக சமீர்வான்கடே சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்.

அவர் காலை 10.15 மணியளவில் விசாரணைக்காக பி.கே.சி.யில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். விசாரணைக்கு செல்லும் முன் வெளியில் இருந்த பத்திரிகையாளர்களிடம் 'வாய்மையே வெல்லும்' என கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார்.

அவரிடம் டெல்லியில் இருந்து வந்த 10 சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் ஆர்யன்கானை பிடித்தது, ஷாருக்கானிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சமீர் வான்கடேவிடம் கேள்விகளை அடுக்கினர். மதியம் 2 மணியளவில் அவருக்கு மதிய உணவு சாப்பிட அதிகாரிகள் ½ மணி நேரம் வழங்கினர். பின்னர் மாலை 4.30 மணி வரை அதிகாரிகள் சமீர்வான்டேவிடம் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு சமீர் வான்கடே சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.


Next Story