வசதியான பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும் ஜனாதிபதி அறிவுரை


வசதியான பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும்  ஜனாதிபதி அறிவுரை
x
தினத்தந்தி 16 Dec 2022 9:00 PM GMT (Updated: 16 Dec 2022 9:00 PM GMT)

பொதுமக்களுக்கு வசதியான ரெயில் பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

புதுடெல்லி,

ரெயில்வேயில், தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள், தங்கள் பயிற்சி காலத்தையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆசி பெற்றனர்.

அப்போது, அவர்களிடையே ஜனாதிபதி பேசினார். அவர் பேசியதாவது:-

ரெயில்களில் மக்கள் வசதியாக பயணம் செய்வதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இனிமையான நினைவுகள் நீடிக்கும்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் தேவைகளை ரெயில்வே பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களுக்கு வசதியான, பாதுகாப்பான பயணத்தை அளிக்க வேண்டும்.

வசதியான பயணம்

இந்தியா, தேசிய, உலக அளவில் முன்னேறி வருகிறது. மக்கள் நடமாட்டமும், பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

எனவே, இந்திய ரெயில்வே, நவீன மின்னணு தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான, நேரத்தை மிச்சப்படுத்தும், வசதியான, உயர்தரமான பயணம் அமைய புதிய வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சரக்கு வழித்தடம்

ரெயில் சேவைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். பயணிகள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல அன்றாடம் பயன்படுத்துவதால், அவர்களின் வாழ்வாதாரமாக ரெயில்கள் விளங்கி வருகின்றன.

பிரத்யேக சரக்கு வழித்தடங்களில் 56 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த வழித்தடங்களை பயன்படுத்தும்போது, போக்குவரத்து செலவு கணிசமாக குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story