12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி


12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி
x

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி அமோக வெற்றி பெற்றார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆனிராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சுரேந்திரன் (பா.ஜனதா) ஆகியோர் தோல்வியை தழுவினர்.

இதேபோல் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் எந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளது.

இந்தநிலையில் வயநாடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வயநாடு செல்கிறார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்ததோடு அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

இதகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வட இந்தியாவில் காங்கிரசின் வளர்ச்சியை துரிதப்படுத்த ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு அங்கு உறுப்பினராக தொடர்வார். மேலும் வயநாடு தொகுதியை அவருக்கு கைவிட மனம் இல்லாமல் இருந்தாலும் வடஇந்தியாவில் காங்கிரஸ் வளர்ச்சிக்காக இந்த முடிவை அவர் எடுப்பார் என்று தெரிகிறது.

அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் பிரியங்கா காந்தி அல்லது திருச்சூர் தொகுதியில் வேட்பாளராக நின்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.முரளிதரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story