புதுவை: போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்


புதுவை: போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x

விபத்து ஏற்படுத்தியவர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள நேரு வீதியானது எப்போதும் அதிக மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் கானப்படக்கூடிய சாலையாகும். இந்த சாலையில் இன்று பிற்பகல் சென்னை பதிவெண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றது. அத்துடன், அங்கிருந்த இருசக்க வாகனங்களை இடித்து தள்ளியபடி அந்த கார் சென்றுகொண்டிருந்தது.

தொடர்ந்து முத்தியால்பேட்டை சென்ற அந்த கார், அங்கேயும் ஒருசில பேர் மீது மோதிவிட்டு சென்றது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றுகொண்டிருந்த அந்த காரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.

இறுதியாக விமான நிலையத்தின் தடுப்புச்சுவர் அருகே வைத்து காரை வழிமறித்த பொதுமக்கள், காரில் இருந்த 5 பேரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில், காரில் இருந்தவர்கள் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், அவர்களை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதுவையில் பட்டப்பகலில் சினிமாவில் வருவதை போல, கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாக சென்றுதும், அந்த காரை பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் மடக்கி பிடிக்க முற்பட்டதன் சிசிடிவி காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story