அசாமில் 1 கோடி மரக்கன்றுகள்... கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


அசாமில் 1 கோடி மரக்கன்றுகள்... கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

அசாமில் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு, பாதுகாப்பதற்கான தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று கலந்து கொண்டார்.

கவுகாத்தி,

அசாமில் மாநிலம் முழுவதும் அமுத விருட்ச அந்தோலன் என்ற திட்டத்தின் கீழ், வர்த்தக ரீதியாக பலனளிக்க கூடிய 1 கோடி மரக்கன்றுகளை செப்டம்பர் 17-ல் (இன்று) நட வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டம் தொடங்க முடிவானது.

இதற்கான நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மத்திய மந்திரி பிரகலாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, 53 வர்த்தக அளவில் பயனளிக்க கூடிய மர இனங்களை தேர்ந்தெடுத்து, இன்று ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று அசாம் முதல்-மந்திரி பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இதில், தனிநபர்களும் ஈடுபடுகின்றனர்.

அவருடைய இந்த முயற்சிக்கு பிரதமர் மோடியும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அசாம் மக்களுக்கு பல வழிகளில் இது பலன் தரும் என தெரிவித்து உள்ளார். இதுபோன்று தொடங்கப்படும் நிகழ்ச்சிகள், நம்முடைய தேசத்தின் தூய்மை மற்றும் பசுமையான வளர்ச்சிக்கான திட்டத்தினை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதன்படி, 1 கோடி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி, 9 கின்னஸ் உலக சாதனைகளையும் படைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.


Next Story