உரிய டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணித்த பயணி... அபராதம் விதித்த பரிசோதகர் மீது தாக்குதல்


உரிய டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணித்த பயணி... அபராதம் விதித்த பரிசோதகர் மீது தாக்குதல்
x

ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் புறநகர் மின்சார ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பர் சிங் என்பவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். அப்போது குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளார். சர்ச்கேட்டில் இருந்து விராருக்கு சென்ற அனிகேத் போசலே என்ற அந்த நபர் முதல் வகுப்பு டிக்கெட்டுடன், குளிர்சாதன பெட்டியில் பயணித்துள்ளார்.

இதையடுத்து அந்த நபரிடம் அபராதம் செலுத்துமாறு ஜஸ்பர் சிங் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ரெயில், போரிவாலி ரெயில் நிலையம் சென்றபோது, அவரை ரெயிலை விட்டு கீழே இறங்குமாறு டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னுடன் பயணித்த இருவருடன் சேர்ந்து ஜஸ்பர் சிங்கின் சட்டையைப் பிடித்து அதட்டியதுடன், தகாத வார்த்தைகளால் அநாகரிகமாக பேசி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலின்போது அவர் மற்ற பயணிகளிடமிருந்து அபராதமாக வசூலித்த ரூ.1,500 காணாமல் போனது.

இந்த நிலையில் அங்கு விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார், பரிசோதகரை மிரட்டிய பயணியை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், அவரிடம் அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், பரிசோதகரிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.


Next Story