அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை - உள்துறை மந்திரி அமித்ஷா


அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை - உள்துறை மந்திரி அமித்ஷா
x

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன. மேலும், அதானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதனிடையே, அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டி அளித்தார்.

அதில் அதானி குழும விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு வசம் வழக்கு விசாரணை இருந்தால் மந்திரியாக இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை' என்றார்.


Next Story