வடஇந்தியாவில் இந்த வாரம் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும் என எச்சரிக்கை


வடஇந்தியாவில் இந்த வாரம் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும் என எச்சரிக்கை
x

வடஇந்தியாவில் இந்த வாரம் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.



புதுடெல்லி,


வடஇந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வருகிறது. இதனால், காலையிலேயே, பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், வடஇந்தியாவில் பரவலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது.

வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அடர்பனியுடன், கடும் குளிர்கால சூழல் காணப்படும். அவற்றில் வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் குளிர் உச்சநிலையை அடையும் என வானிலை நிபுணர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதில், நடப்பு பருவத்தில் முன்பே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் குறைந்தபட்ச வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதவிர, புதுடெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் வடபகுதிகளில் இந்த வாரத்தில் குளிர் கடுமையாக இருக்கும்.

வடஇந்தியாவில் மேற்கு திசையில் இருந்து வீசும் பலத்த காற்றால், சில நாட்களாக மக்களுக்கு நிவாரணம் கிடைத்தபோதிலும், உறைபனி சூழல் விரைவில் திரும்பும். குளிர்காற்று பரவலாக வீச கூடும் என்று வானிலை நிபுணர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். எனது பணி அனுபவத்தில் இதுபோன்று கடுமையான குளிர்கால சூழல் காணப்பட்டது இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்த பலத்த காற்றால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். குளிர் சற்று குறைந்து வெப்பநிலை உயர்ந்தது. இதனால், வானிலையில் சற்று தெளிவு காணப்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படாமல் இருந்தது.

வானிலை நிபுணரின் எச்சரிக்கையை அடுத்து, வடஇந்திய மக்கள் மீண்டும் கடுமையான குளிரை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்து, ரெயில், விமான போக்குவரத்து ஆகியவை மீண்டும் பாதிக்கப்பட கூடிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.


Next Story