நேபாள நிலநடுக்கம்; பிரதமர் மோடி இரங்கல்


நேபாள நிலநடுக்கம்; பிரதமர் மோடி இரங்கல்
x

டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

புதுடெல்லி,

நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார். அவர் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றுள்ளார். நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்து உள்ளது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், நேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஆகியவற்றால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

நேபாள மக்களுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கிறது. சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். துயருற்றுள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் எண்ணங்களுடன் கலந்திருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story