நக்சல் பாதித்த பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது: சத்தீஷ்கார் முதல்-மந்திரி


நக்சல் பாதித்த பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது:  சத்தீஷ்கார் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 7 Nov 2023 5:28 AM GMT (Updated: 7 Nov 2023 8:37 AM GMT)

சத்தீஷ்கார் காங்கிரஸ், பொதுமக்களின் நன்மைக்காக எப்போதும் துணை நிற்கும் என்று முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் கூறினார்.

ராய்ப்பூர்,

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில், 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.

இதற்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. அதேநேரம் பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 60 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.

இந்நிலையில், சத்தீஷ்கார் முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பூபேஷ் பாகெல் செய்தியாளர்களிடம் கூறும்போது, 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணியால், நக்சல்வாதம் பெருமளவில் குறைந்துள்ளது.

இதன் பயனாக, கிராமங்களின் உள்ளே வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அவர்களுடைய கிராமங்களில் வாக்கை செலுத்துவார்கள். நக்சல் பாதித்த பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, சத்தீஷ்கார் காங்கிரஸ், பொதுமக்களின் நன்மைக்காக எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறினார். சத்தீஷ்காருக்கான தேர்தல் வாக்குறுதிகளை பற்றி அவர் பேசும்போது, காங்கிரசின் தேர்தல் அறிக்கை இவை எல்லாவற்றையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.


Next Story