உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு..!


உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Aug 2023 7:23 AM GMT (Updated: 7 Aug 2023 7:32 AM GMT)

உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்த கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே வேளையில் அந்த ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, மர்ம நபர்கள் மீது அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story