ம.பி.: இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம், மின்சாரம், மருத்துவம் இலவசம்; வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்


ம.பி.:  இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம், மின்சாரம், மருத்துவம் இலவசம்; வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்
x

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார்.

போபால்,

நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடந்த பேரணி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூட்டத்தில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடி பேசினார். தனது மருமகன்கள் மற்றும் மருமகள்களையே மோசடி செய்த மாமா மீது நம்பிக்கை வைப்பதனை மக்கள் நிறுத்த வேண்டும் என அப்போது கேட்டு கொண்டார். மாமாவை நம்ப வேண்டாம். உங்களுடைய மகன், சகோதரர் மற்றும் சாச்சா (மாமா) வந்துள்ளார். சாச்சா மீது நம்பிக்கை வையுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.

சவுகானை மக்கள் மாமா என குறிப்பிடுவது வழக்கம். கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, தரம் வாய்ந்த பள்ளிகளை கட்டுவது மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப்பில் இதுபோன்ற பல வாக்குறுதிகளை வழங்கி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியும் வருகிறது.


Next Story