கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மைசூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால், அணைகளும் நிரம்பாமல் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதன் அடிப்படையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 15 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு மைசூரு, மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மைசூருவில் மாநில விவசாய கூட்டமைப்புகளின் தலைவர் குருபூர் சாந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையாக உள்ள நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பது கண்டிக்கத்தக்கது.

இதுபற்றி கர்நாடக எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதனால், எம்.பி.க்கள் காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி கோரி, வருகிற 4-ந்தேதி மாநிலத்தில் உள்ள எம்.பி. அலுவலங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story