காஷ்மீரில் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா...!


காஷ்மீரில் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா...!
x
தினத்தந்தி 29 Aug 2023 11:12 AM GMT (Updated: 29 Aug 2023 11:34 AM GMT)

உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா காஷ்மீர் பயணம் மேற்கொண்டார்.

ஸ்ரீநகர்,

2023ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உலக அழகி போட்டி நடக்க இருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இதனிடையே, போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அவர் அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அயர்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகி பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், உலக அழகி கரோலினா ஒருநாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார். அவருடன் மிஸ் இந்தியா அழகி சினி ஷெட்டி, மிஸ் வெல்ட் கரீபியன் அழகி எமி பெனா ஆகியோரும் காஷ்மீர் சென்றனர்.

ஸ்ரீநகர் சென்ற அவர்கள் அனைவரும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்காவையும் சந்தித்தனர். மேலும், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற கரோலினா உள்பட அழகிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். 2023ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து காஷ்மீர் பயணம் குறித்து கருத்து தெரிவித்த உலக அழகி கரோலினா, இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் காஷ்மீர் குறித்து பேசினோம். மிகவும் அழகிய இயற்கை காட்சிகள் இருக்கும் என எனக்கு தெரியும். ஆனால், நான் இன்று பார்த்தது என் மனதை திகைப்படைய செய்துவிட்டது. அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆகையால்,140 நாடுகளையும், என் நண்பர்கள், குடும்பத்தினரையும் இந்தியாவிற்கு அழைத்துவந்து, காஷ்மீரை காண்பிக்க நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்' என்றார்.


Next Story