மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள்: முதல்-மந்திரி சங்மாவின் கட்சி; வெற்றி-5, முன்னிலை-20


மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள்:  முதல்-மந்திரி சங்மாவின் கட்சி; வெற்றி-5, முன்னிலை-20
x

மேகாலயா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதல்-மந்திரி சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றியும், 20 இடங்களில் முன்னிலையும் பெற்று உள்ளது.


துரா,


60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.

இந்நிலையில், கட்சி தலைவர் ஜே.டி. சங்மா கூறும்போது, நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். காசி மற்றும் ஜைந்தியா ஹில்ஸ் பகுதியில் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேகாலயாவில் மொத்தம் 31 முதல் 32 தொகுதிகளை கைப்பற்றுவோம். கொண்டாட்டங்களுக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என கூறினார்.

ஆளும் கூட்டணியில் என்.பி.பி. மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் இருந்தபோதும், தேர்தலில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன.

இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாவை, சங்மா நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்து அரை மணிநேரம் வரை பேசினார். எனினும், மேகாலயா தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய கூடும் என தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இந்த சூழலில், மேகாலயாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று, நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் மேகாலயாவில், முதல்-மந்திரி கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி இதுவரை 5 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து கட்சியின் மகளிரணியை சேர்ந்த ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் சங்மாவை இன்று உற்சாகமுடன் வரவேற்றனர். அதன்பின் நடனம் ஆடியபடியும், பாட்டு பாடியும், கைத்தட்டி ஆரவாரம் செய்தபடி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வெற்றி பெற தேவையான 31 தொகுதிகளை கைப்பற்றும் முனைப்புடன் அக்கட்சி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


Next Story