மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா?


மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா?
x

மணிப்பூரில் பரவிய கலவரங்களில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர்.

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.

மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு முதல்-மந்திரி பிரேன் சிங்தான் காரணம் என அவர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்த நெருக்கடிக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி விவாதித்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து மணிப்பூர் கவர்னர் அனுசியாவை இன்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி, உள்துறை மந்திரி ஆகியோரை மணிப்பூர் கவர்னர் சந்தித்த நிலையில் இந்த முடிவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேன் சிங் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகளும், பாஜக உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


Next Story